கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் சமீபத்தில் இளம் மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கு விசாரணை மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
கேரளத்தில் உள்ள மருத்துவமனையில் 23 வயது பெண் மருத்துவரான வந்தனா தாஸை சிகிச்சைக்கு வந்த பள்ளி ஆசிரியா் கத்தரிக்கோலால் புதன்கிழமை குத்திக் கொன்றார். அவரை போலீஸாா் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் பாதுகாப்புக்கோரி நேற்று பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இனி மாவட்ட குற்றப்பிரிவு விசாரணையை ஏற்று நடத்த உள்ளதாக மூத்த மாவட்ட காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இளம் மருத்துவரின் கொலை மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அரசாணையை வெளியிட அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.