பதோஹி (உத்தரபிரதேசம்): 2014 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ விஜய் மிஸ்ராவுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து எல்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுபோத் சிங் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளா்ா.
கடந்த 2014 -ஆம் ஆண்டு அரசியல் பேரணிகளில் நிகழ்ச்சி நடத்துவதற்காக வாரணாசியை சேர்ந்த பாடகியை தனது வீட்டிற்கு வரவழைத்து மிஸ்ரா பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மற்றொரு வழக்கில் மிஸ்ரா கைது செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு 2020 அக்டோபரில் அந்த பாடகி இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்படி, 2014 -ஆம் ஆண்டில் மிஸ்ராவின் வீட்டில் 25 வயதுடைய பாடகியை பாடல்கள் பாட அழைக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் நிகழ்ச்சிக்கு முன் ஆடைகளை மாற்றிக் கொண்டிருந்தபோது, மிஸ்ரா தனது அறைக்குள் நுழைந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் நடந்த சம்பவத்தை வேறு யாரிடமாவது தெரிவித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிஸ்ரா மிரட்டுள்ளார்.
பின்னர் பாடகியை அவரது வீட்டில் இறக்கிவிடுமாறு விஜய் மிஸ்ரா தனது மகன் விஷ்ணு மிஸ்ரா மற்றும் பேரன் விகாஸ் மிஸ்ராவிடம் கூறியுள்ளார், அவர்கள் அவரை வேறு கட்டடத்திற்கு அழைத்துச் சென்று அவர்களும் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், விஜய் மிஸ்ரா தனது பிரயாக்ராஜ் இல்லத்திலும் வாரணாசி ஹோட்டலிலும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து விஜய் மிஸ்ரா, அவரது மகன் மற்றும் அவரது பேரன் மீது கோபிகஞ்ச் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு எல்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ விஜய் மிஸ்ராவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பில் நீதிபதி சுபோத் சிங் தெரிவித்துள்ளதாவது:
இளம் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் எம்எல்ஏ விஜய் மிஸ்ராவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அதே வழக்கில், கிரிமினல் மிரட்டல் (506), குற்றச்சாட்டின் பேரில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் இரண்டு தண்டனைகளும் ஒரே நேரத்தில் அனுபவிக்கலாம்.
குற்றம் சாட்டப்பட்ட விஷ்ணு மிஸ்ரா மற்றும் விகாஸ் மிஸ்ரா ஆகியோர் மீது போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்படுகின்ரனர்.
மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே அனுபவித்த சிறை தண்டனையை தண்டனை காலத்தில் இருந்து மாற்றி அமைக்கப்படும் என்றும், விதிகளின்படி அபராதத் தொகை பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விஜய் மிஸ்ரா நான்கு முறை கியான்பூரில் இருந்து எம்எல்ஏவாக இருந்தவர். அவர் மீது கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு, மோசடி, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சொத்து அபகரிப்பு உள்ளிட்ட 83 கிரிமினல் வழக்குகளுடன் தற்போது ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.