புது தில்லி அரசு, ‘தில்லி மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் மற்றும் சேவைகள் வழங்குநர் திட்டம் 2023’ என்கிற திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக தில்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் அனைத்து பயணிகள் போக்குவரத்து, சேவை வழங்குதல் மற்றும் ஆன்லைன் விற்பனை ஆகியவற்றை அளிப்பவர்களின் வாகனங்களை 2030-ம் ஆண்டுக்குள் மின்சார வாகனமாக மாற்ற வலியுறுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே உள்ள மற்றும் புதிய ஒருங்கிணைப்பாளர்கள் இந்தத் திட்டத்தின் அறிவிப்பு வெளிவந்த 90 நாள்களுக்குள் உரிமம் பெற வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தத் திட்டம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில் சூழலியல் பாதுகாப்பையும் முதன்மையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாசுபாட்டைக் குறைக்க மின் வாகனங்களை அதிகளவில் பயன்படுத்த ஊக்குவிக்கும் இந்தத் திட்டம் நாட்டிலேயே கெஜ்ரிவால் அரசு மட்டுமே கொண்டு வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: மேற்கு வங்கத்தில் எம்எல்ஏக்களின் சம்பளம் உயர்வு!
பயணிகளுக்கான சேவைகள் வழங்கும் தளங்கள், விலையை உயர்த்தியுள்ளது குறித்து புகார் எதுவும் வரவில்லை என்றும், அப்படி புகார் அளிக்கப்பட்டால் விதிகள் வகுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.