
வட மாநிலங்களான ஹிமாசல் மற்றும் உத்தரகண்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மேக வெடிப்பால் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
ஹிமாசலின் சிம்லா மாவட்டத்தில் ராம்பூர் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் 50 பேர் அடித்துச் சென்றுள்ளனர். அதேபோன்று உத்தரகண்டில் தெஹ்ரி, ஹரித்வார், ரூர்க்கி, சமோலி, டேராடூன் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதில் ஜக்கன்யாலியின் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், நிகழாண்டுக்கான கேதார்நாத் யாத்திரை நிகழ்ந்துவரும் நிலையில், நேற்று பெய்த கனமழையினால் ஏற்பட்ட மேக வெடிப்பால் மந்தாகினி ஆற்றின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து கரையோரம் உள்ள மக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
இதனிடையே கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் பாதையில் உள்ள பீம் பாலி ஓடையில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு பாதையின் 25 மீட்டர் வரை சேதமடைந்தது. இந்த பாதை தற்காலிகமாக மூடப்பட்டதால் பீம் பாலியில் சுமார் 200 பக்தர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை அங்கு எந்த உயிரிழப்பு சம்பவமும் நிகழவில்லை.
மேக வெடிப்பைத் தொடர்ந்து எஸ்டிஆர்எ, மாவட்ட காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துச்சென்று அங்குச் சிக்கித் தவித்த பக்தர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். ஆன்மிக யாத்திரையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் கனமழை குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேரிடர் மேலாண்மை செயலாளரிடம் ஆலோசனை நடத்தினார். மேலும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளையும் அவர் பார்வையிட்டார். சிம்லாவில் வெள்ளப்பெருக்கில் அடித்துச்சென்றவர்களைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.