
கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவரின் சடலத்தை வெள்ளிக்கிழமை சக மாணவர்கள் கண்டுள்ளனர். உடனே இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதேசமயம் சடலத்தில் காயங்கள் இருந்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் அரைநிர்வாண நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதுகலை 2ஆம் ஆண்டு மாணவி என்றும் இவர் வியாழக்கிழமை மருத்துவமனையில் இரவு பணியில் இருந்திருக்கிறார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவருடன் நேற்று இரவு பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரிடம் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் இதுதொடர்பாக நகர காவல் ஆணையர் வினீத் கோயல், மற்ற அதிகாரிகளுடன் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ நிறுவன உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தியுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து முதுகலை பெண் பயிற்சி மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.