கடவுளால் அல்ல, கணவரின் அருளால் குழந்தைப்பேறு: அஜித் பவார்
புணே: மகாராஷ்டிர மாநிலம் மாவல் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் அஜித் பவார், குழந்தைப் பேறு கிடைப்பதில் கடவுளின் அருள் எதுவுமில்லை, கணவரால்தான் குழந்தைப் பேறு கிட்டுகிறது என்று கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிர மாநிலத்தில், அஜித் பவார் தலைமையில் நடைபெற்று வரும் நடைப்பயணம் இன்று மாவல் வந்தடைந்தது.
அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அஜித் பவார், குடும்பத்தை சிறியதாக வைத்துக்கொள்ளுங்கள், இரண்டு குழந்தைகளுக்கு மேல் வேண்டாம், அப்போதுதான் அரசின் சலுகை மற்றும் திட்டங்கள் கிடைக்கும் என்று மகளிருக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அஜித் பவார், ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கிறது என்றால், அதில் கடவுளின் அருள் எதுவும் இல்லை, மாறாக, அவரது கணவரின் பங்குதான் இருக்கிறது. இதில் எந்த கடவுளின் தலையீடும் இல்லை, எனவே, நான் அனைத்து மதத்தைச் சேர்ந்த பெண்களையும் கேட்டுக்கொள்வது ஒன்றைத்தான், அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளை மட்டும் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தை சின்னதாக வைத்துக்கொண்டால், உங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்க்க முடியும், அவர்களை கவனிக்க முடியும், நல்ல கல்வியை வழங்க முடியும். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நல்ல வாழ்வை வாழ முடியும் என்று கூறினார்.
அதுபோல, அந்த மாநிலத்தில், மகளிருக்கு வழங்கப்படும் உதவித்தொகை, எக்காரணம் கொண்டும் வங்கியிலிருந்து திரும்பப்பெற மாட்டாது என்றும் உறுதி அளித்துள்ளார் அஜித் பவார்.