
நிலம் ஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா எந்த தவறும் செய்யவில்லை என கர்நாடக துணை முதல்வர் டிகே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. சித்தராமையாவின் மனைவி பார்வதியின் பெயரில் மைசூரு கேசரே பகுதியில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியுள்ளது.
அதற்குப் பதிலாக, விஜயநகர் பகுதியில் கூடுதல் மதிப்புள்ள நிலங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த ஆபிரஹாம் என்பவர் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து தலைமைச் செயலர் மற்றும் சட்ட வல்லுநர்களிடம் விசாரிக்கக்கூறி ஆளுநர் அறிக்கையும் பெற்றார்.
பின்னர் புகார் குறித்து விளக்கம் கேட்டு சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி சமூக ஆர்வலர் ஆப்ரஹாம், மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
இதையடுத்து ஆளுநர் ஒப்புதல் அளிக்கவே, சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது. ஆனால், முதல்வர் சித்தராமையா தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் முதல்வர் சித்தராமையாவுக்கு கர்நாடக துணை முதல்வர் டிகே. சிவகுமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதில், ஒட்டுமொத்த கட்சியும், அரசும் முதல்வருடன் துணை நிற்கின்றன. அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட பிரச்னை. எனவே நீதிமன்றத்திற்குச் சென்று சட்டப்பூர்வ தீர்வுகளை எடுப்போம்.
மேலும், மாநிலம் முழுவதும், ஆளுநரின் நிலைப்பாட்டை எதிர்த்து எங்கள் கட்சியினர் போராட்டம் நடத்துவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.