மேற்கு வங்கம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலம்: ஆளுநர் ஆனந்த போஸ்
மேற்கு வங்கம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் அல்ல என்று அம்மாநிலத்தின் ஆளுநர் ஆனந்த போஸ் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி பெற்று வந்த 31 வயதான பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க ஆளுநர் கூறியதாவது:
“மேற்கு வங்கம் பெண்களுக்கு பாதுகாப்பான இடமல்ல. மேற்கு வங்கத்தின் பெண்களை தோல்வியடைய செய்துள்ளனர். தற்போதைய அரசு பெண்களை பாதுகாக்க தவறிவிட்டது.
சமூகத்தில் பெண்களுக்கு மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றிருந்த மேற்கு வங்கத்தை, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும்.
இந்தப் பிரச்னையில் அக்கறையற்ற அரசு உருவாக்கியுள்ள குண்டர்களை கண்டு பெண்கள் அச்சத்தில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மம்தா மீது நம்பிக்கையில்லை என்று பாலியல் கொலை செய்யப்பட்ட மருத்துவரின் பெற்றோர் தெரிவித்ததற்கு, அவர்களின் உணர்வை மதிப்பதாகவும், சட்டம் தனது கடமையை செய்யும் என்றும் ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை(ஆக. 18) செய்தியாளர்களுடன் பேசிய பெண் மருத்துவரின் பெற்றோர், தங்கள் மகளுக்கு நீதி கேட்டு நடைபெறும் போராட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகளில் முதல்வர் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருவதாகவும், இந்த வழக்கை அவசர கதியில் விரைந்து முடிக்க முற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.