
சிபிஐ விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று கொல்கத்தா பெண் மருத்துவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராவ் என்பவா் கைது செய்யப்பட்டாா்.
கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட மருத்துவமனையின் முதல்வராகப் பணியாற்றிய சந்தீப் கோஷ், அந்த சம்பவம் நடைபெற்ற 2 நாள்களுக்குப் பிறகு முதல்வா் பொறுப்பை ராஜிநாமா செய்தாா்.
இவ்வழக்கில் கைதான சஞ்சய் ராவுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதித்து சீல்டா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர் சிபிஐயின் மேற்பார்வையின் கீழ் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிபிஐ விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று கொல்கத்தா மருத்துவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் கொல்கத்தா பெண் மருத்துவரின் தந்தை செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த வழக்கில் கொல்கத்தா காவல்துறை எங்களை தவறாக வழிநடத்த முயன்றது.
ஆரம்பத்திலிருந்தே, (மாநில) நிர்வாகமும் காவல்துறையும் யாரோ ஒருவரைப் பாதுகாக்க முயற்சிப்பதாக நாங்கள் உணர்ந்தோம், இதுபோன்ற குற்றத்தில் ஒருவர் ஈடுபட முடியாது என்பதால் எதையாவது மறைக்க முயற்சிக்கிறார்கள். சிபிஐ விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வழக்கு விசாரணைக்காக, ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் தலைவர் சந்தீப் கோஷ், 8வது நாளாக இன்றும் சிபிஐ முன் விசாரணைக்காக ஆஜராகியிருக்கிறார்.