
சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக ஊழல் உயர்ந்துள்ளது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரத்தின் சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் இருந்த 17 ஆம் நூற்றாண்டின் மராட்டிய சாம்ராஜ்யத்தின் மகாராஜா சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை திங்கள்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்தது. இந்த நிலையில், மகாராஷ்டிரத்தின் பல இடங்களில் கலவரம் ஏற்படுவதாகவும் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் இடிந்த சத்ரபதி மகாராஜ் சிலை குறித்து செய்தியாளர் கூட்டத்தில் பேசினர்.
உத்தவ் தாக்கரே பேசியதாவது, ``பலத்த காற்று வீசியதால்தான், சிலை இடிந்து விழுந்தது என்று அரசு கூறியிருப்பது வெட்கக்கேட்டின் உச்சம். மாநில அரசை எதிர்த்து, மகா விகாஸ் அகாதி கூட்டணிக் கட்சிகளின் தலைமையில் செப்டம்பர் 1 ஆம் தேதியில், தெற்கு மும்பையில் உள்ள ஹுதாத்மா சௌக்கில் இருந்து இந்தியாவின் நுழைவாயில் வரை அணிவகுத்துச் செல்லவுள்ளது.
சிவாஜி மகாராஜின் சிலை இடிந்து விழுந்ததற்கு எதிராக கலகம் ஏற்படுத்துபவர்கள் போர்வீர மன்னருக்கு துரோகம் இழைப்பவர்களே’’ என்று தெரிவித்தார்.
மேலும், மகாராஷ்டிர கல்வியமைச்சர் தீபக் கேசர்கார், `சரிவிலிருந்துதான் ஏதாவது நல்லது வெளிவரும்’ என்று கூறியிருந்தார்.
கல்வியமைச்சரின் கருத்தினை விமர்சிக்கும் விதமாக தாக்கரே, ``ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்க, ஒரு புதிய டெண்டர் போடப்படும்; அதில் மீண்டும் ஒரு மோசடி நடக்கும்.
சிலையை உருவாக்கிய சிற்பிக்கு உயரமான சிலைகளைக் கட்டிய அனுபவம் இல்லை போல. அப்பகுதியின் புவியியல் நிலைமைகள் பற்றி அவருக்குத் தெரியாது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன’’ என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சரத் பவார் ``சிலையை நிறுவுவதற்கு கடற்படையின் அனுமதி அவசியம் என்பதால் கடற்படையை குற்றம் சாட்டுவதன் மூலம் அரசாங்கம் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது.
இந்த சிலையை உருவாக்கத்திலும் ஊழல் நடந்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் ஊழல் உச்சத்தை எட்டியுள்ளது என்பது தெரியவருகிறது’’ என்று தெரிவித்தார்.
இடிந்து விழுந்த சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை, பிரதமர் நரேந்திர மோடியால் கடந்தாண்டு டிசம்பர் 4 ஆம் தேதியில்தான் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.