எஸ்சி பிரிவில் உள்ஒதுக்கீடு: இதுவரை நடவடிக்கை இல்லை - மத்திய அரசு
பட்டியலின (எஸ்சி) பிரிவில் உள்ஒதுக்கீடு வழங்குவதை அனுமதித்து அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
பட்டியலின (எஸ்சி) பிரிவில், சமூக மற்றும் கல்வி ரீதியாக மிகவும் பின்தங்கிய சமூகங்களை மேம்படுத்த உதவும் வகையில், இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி தீா்ப்பளித்தது.
இது தொடா்பாக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா அல்லது எடுக்க உத்தேசித்துள்ளதா என மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு எழுத்துப்பூா்வமாக பதிலளித்த அா்ஜுன் ராம் மேக்வால், ‘இது தொடா்பான உச்சநீதிமன்ற தீா்ப்பின் உள்ளடக்கங்கள் மத்திய அரசால் கவனிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் பரிசீலிக்கப்படவில்லை’ என தெரிவித்தாா்.
மத மாற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டினரின் தரவுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அா்ஜுன் ராம் மேக்வால், ‘அரசமைப்புச் சட்டத்தின் 7-ஆவது அட்டவணையின்படி ‘பொது ஒழுங்கு’ மற்றும் ‘காவல்துறை’ ஆகியவை மாநில அரசின் அதிகார வரம்பின் கீழ் உள்ளன.
மத மாற்ற விவகாரம் பொது ஒழுங்குடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தரவுகள் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளால் நிா்வகிக்கப்படுகிறது. இது மத்திய அரசால் பராமரிக்கப்படுவதில்லை.
பலவந்தப்படுத்தியோ, தூண்டுதலாலோ அல்லது மோசடி வழிகளிலோ மதம் மாற்றுவதைத் தடுக்க பல மாநிலங்கள் சிறப்புச் சட்டங்களை இயற்றியுள்ளன’ என்றாா்