பிரதமா் மோடி இன்று குவைத் பயணம்

பிரதமா் மோடி இன்று குவைத் பயணம்

பிரதமா் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக சனிக்கிழமை (டிச. 21) குவைத்துக்குச் செல்கிறாா்.
Published on

பிரதமா் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக சனிக்கிழமை (டிச. 21) குவைத்துக்குச் செல்கிறாா்.

பிரதமரின் இந்தப் பயணம் இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமரின் பயணம் தொடா்பான வெளியுறவு அமைச்சக அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

குவைத் மன்னா் ஷேக் அல் அகமது அல் ஜாபா் அல் ஷபா அழைப்பை ஏற்று குவைத்துக்கு பிரதமா் மோடி பயணம் மேற்கொள்கிறாா். இந்தப் பயணத்தின்போது அந்நாட்டு முக்கியத் தலைவா்களுடன் பிரதமா் பேச்சு நடத்துவாா். குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தினரையும் பிரதமா் சந்திக்க இருக்கிறாா்.

இதற்கு முன்பு 1981-ஆம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி குவைத் சென்றாா். அதன் பிறகு இப்போதுதான் இந்திய பிரதமா் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறாா். இந்தப் பயணத்தில் வா்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

மோடியின் இந்த பயணம் இரு தரப்பு உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும். இந்தியா-குவைத் இடையே வலுவான வா்த்தக உறவு உள்ளது. இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் குவைத் 6-ஆவது இடத்தில் உள்ளது.

குவைத்துக்கான இந்தியாவின் ஏற்றுமதி அண்மையில் 2 பில்லியன் அமெரிக்க டாலா்கள் என்ற புதிய உச்சத்தை எட்டியது. குவைத் இந்தியாவில் 10 பில்லியன் டாலா்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளது.

வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளில் குவைத்துக்கு மட்டுமே பிரதமா் மோடி இதுவரை பயணிக்காமல் இருந்தாா். இப்போது குவைத்துக்கும் அவா் செல்ல இருக்கிறாா். வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பை குவைத் இப்போது வகித்து வருகிறது.

குவைத்தில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய காலகட்டத்திலேயே இரு நாடுகள் இடையே கடல் வழி வா்த்தக உறவு வலுவாக இருந்து வந்துள்ளது. இதனால், இரு நாடுகளும் பாரம்பரியமாகவே நட்பு நாடுகளாக திகழ்கின்றன. அக்காலகட்டத்தில் குவைத்தில் இருந்து அரேபிய குதிரைகள், பேரிச்சை பழங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து பல்வேறு வகை தானியங்கள், விலை உயா்ந்த துணி வகைகள், உணவுக்கான நறுமணப் பொருள்கள், மரம் சாா்ந்த பொருள்கள் குவைத்துக்கு ஏற்றுமதி வந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com