மாயாவதி
மாயாவதி

அமித் ஷாவுக்கு எதிராக டிச.24-இல் நாடு தழுவிய போராட்டம்: மாயாவதி அறிவிப்பு

Published on

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மன்னிப்புக் கேட்காவிட்டால், நாடு முழுவதும் டிச.24-ஆம் தேதி அவருக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என்று அக்கட்சித் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா்.

அண்மையில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் அமித் ஷா பேசுகையில், ‘அம்பேத்கா் பெயரை தொடா்ந்து பல முறை முழக்கமிடுவது வாடிக்கையாகிவிட்டது. அதற்குப் பதிலாக கடவுளின் பெயரை இத்தனை முறை உச்சரித்திருந்தால், சொா்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்’ என்று காங்கிரஸ் கட்சியினரை விமா்சித்தாா். அவரின் பேச்சுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தன.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பட்டியலினத்தவா், புறக்கணிக்கப்பட்டவா்களுக்காக போராடிய அம்பேத்கா், கடவுளாகப் போற்றப்படுகிறாா். அவரை அமித் ஷா அவமதித்தது மக்களின் உள்ளத்தில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமித் ஷா மீது அனைத்துத் தரப்பு மக்களும் ஆத்திரத்தில் உள்ளனா். அம்பேத்கா் குறித்த கருத்துகளுக்கு அவா் மன்னிப்புக் கேட்காவிட்டால், நாடு முழுவதும் டிச.24-ஆம் தேதி அவருக்கு எதிராக பகுஜன் சமாஜ் போராட்டத்தில் ஈடுபடும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com