ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவரான ஒய்.எஸ்.சர்மிளாவுக்கு இணையத்தில் வந்த கொலை மிரட்டல்களை ராகுல்காந்தி கண்டித்துள்ளார். இது ஒரு இழிவான செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, 'பெண்களை மிரட்டுவதும், அவமதிப்பதும் கோழைத்தனமான செயல். வலிமையற்றவர்களின் பிரதான ஆயுதமும் அதுதான்' எனக் கூறியுள்ளார்.
மேலும், 'காங்கிரஸ் கட்சியும், நானும் ஒய்.எஸ். சர்மிளாவிற்கும், சுனிதாவிற்கும் ஆதரவாக நிற்கிறோம். இந்த இழிவான செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்' என அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், 'காங்கிரஸ் கட்சிக்கும் ஷர்மிளாவிற்கும் நாளுக்கு நாள் ஆந்திராவில் ஆதரவு பெருகிவருவது சிலருக்குப் பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது' என ஏஐசிசி பொதுச்செயலாளர் கே சி வேனுகோபால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காகவும், அது குறித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை எதிர்த்தும் கடந்த வெள்ளிக்கிழமை ஒய்.எஸ் சர்மிளா தில்லி ஆந்திரபவனில் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.