மூத்த காங்கிரஸ் தலைவர் அமர்ஜித் பகத், வருமான வரித்துறை சோதனை என்பது துன்புறுத்த மேற்கொள்ளும் முயற்சி எனத் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராகவிருந்த அமர்ஜித், இது எதுவும் தன்னைத் தடுக்காது எனவும் பழங்குடிகளின் உரிமைக்காகப் போராடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜன.31 ஆம் தேதி. அம்பிகாபூர் மற்றும் ராய்ப்பூரில் இருக்கும் அமர்ஜித்தின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இன்னும் சில தொழிலதிபர்கள், கட்டுமான தொழில் செய்வோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
4 நாள்கள் இந்தச் சோதனை தொடர்ந்தது. இந்த நாள்களில் தங்களை வீட்டை விட்டுகூட வெளியே அனுமதிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் ஜோடா யாத்திரையில் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள அமர்ஜித், அடுத்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாகவும் இந்த நிலையில் ஐ.டி. சோதனை தன்னை மிரட்டவும் அச்சுறுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சி எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக கூட்டணி வெல்லும்: மோடி
அமர்ஜித், “பழங்குடிகளின் தலைவர் நான். என்னைப் பொறுக்க இயலவில்லையெனில் ஐ.டி. சோதனை அனுப்புவதற்கு பதில் என்னைச் சுட்டு விடலாம். பழங்குடி உரிமைக்காக என் உயிர் இருக்கும் வரை போராடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.