
புது தில்லி: தனது 28 வாரக் கருவைக் கலைக்க அனுமதி கோரி திருமணமாகாத 20 வயது பெண் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி அறிவித்தார்.
"முழுமையாக வளர்ந்த கருவை" கலைக்க அனுமதிக்க மாட்டோம் என்று வாய்மொழியாக உத்தரவிட்ட நீதிமன்றம் கடந்த வாரம் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.
"28 வாரங்கள் நன்கு வளர்ந்த கருவை கலைக்க அனுமதிக்கப் போவதில்லை. சிசுவுக்கு எந்த குறையும் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. கருக்கொலையை அனுமதிக்க முடியாது” என்று நீதிபதி கூறினார்.
இதையும் படிக்க.. விதைக்காமலேயே அறுவடை செய்த விவசாயி! பட்டுக்கோட்டையில் அதிசயம்
கருவைக் கலைக்க அதிகபட்ச காலமான 24 வாரத்தைக் கடந்துவிட்டதால், மருத்துவர்கள், இப்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய மறுத்துவிட்டனர். இதையடுத்து அனுமதி கோரி அவர் உயர் நீதிமன்றத்தை நாடினார்.
இவருக்கு சார்பில் வாதாடிய வழக்குரைஞர் அமித் மிஷ்ரா, கடந்த ஜனவரி 25ஆம் தேதிதான், இவர் 27 வாரக் கால கருவை சுமந்துகொண்டிருப்பதையே அறிந்துகொண்டார். அதற்கு முன்புவரை அவர் கருவுற்றிருப்பதை அறியவில்லை என்று வாதிட்டார்.
மேலும், இப்பெண் திருமணமாகாதவர் என்றும், இவர் கருவுற்றிருப்பது இவரது குடும்பத்தினருக்குத் தெரியாது என்பதாலும் மனுவை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
எனினும், 28 வாரங்கள் முழுமையாக வளர்ந்த கருவைக் கலைக்க, அதுவும் மருத்துவக் காரணங்கள் எதுவும் இல்லாத நிலையில் அனுமதியளிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.