வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியை நோக்கி பஞ்சாப் விவசாயிகள் தடையை மீறி நடத்தி வரும் பேரணி ஹரியாணா எல்லையில் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டது.
போலீஸாரின் தடுப்புகளை மீறி செல்ல முற்பட்ட விவசாயிகள் மீது ஹரியாணா போலீஸார் ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கலைத்தனர்.
இருப்பினும், நவீன வாயுக் கவசம் உள்ளிட்டவை அணிந்து தடுப்புகளை மீறி தில்லியை நோக்கி விவசாயிகள் முன்னேறி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் நடத்திவரும் ‘தில்லி சலோ 2.0′ பேரணியை தடுக்க தில்லி போலீசார் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
போராட்டம் செய்யும் விவசாயிகளை எதிர்கொள்ள பேரொலி எழுப்பி சாதனத்தை தில்லி காவல் துறையினர் பயன்படுத்தியுள்ளனர். இந்த சாதனம் மூலம் பேரொலியை எழுப்பி எதிரே இருப்பவர்களை அசெளகரியம் அடையச் செய்யலாம்.
மேலும், பேரொலி எழுப்பி சாதனத்தால் செவித்திறன் சேதப்படும் அபாயமும் உள்ளது.