போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீதான அரசின் நடவடிக்கைகளை மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டித்துள்ளது. மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்த அவர்களுக்கு முழு உரிமை உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
மக்கள் சிவில் உரிமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2020 - 2021ல் நடந்த விவசாயிகள் போராட்டத்தினைச் சுட்டிக்காட்டியது. கடும் வானிலைகளை பொருட்படுத்தாமல் விவசாயிகள், தொழிற்சங்கங்கள் என ஆயிரக்கணக்கானோர் அந்தப் போராட்டத்தில் பங்குபெற்றனர். 700 விவசாயிகள் உயிரிழந்தைததையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.
மேலும், 2021 போராட்டத்தை முடிக்கக் காரணமாக அமைந்த மோடியின் உறுதிமொழிகளை அரசு நிறைவேற்ற மறுத்துவிட்டது எனவும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தங்களது கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவது அவர்களது அடிப்படை உரிமை என மக்கள் சிவில் உரிமைக் கழகம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள், தங்களது உற்பத்திகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை, விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம், 2021 போராட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெறுதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.