பிரபல சட்ட நிபுணர் வழக்குரைஞர் எஸ்.நாரிமன் காலமானார்!

மூத்த வழக்குரைஞரும் பிரபல சட்ட நிபுணருமான ஃபாலி எஸ்.நாரிமன்(95) புதன்கிழமை அதிகாலை காலமானார்.
பிரபல சட்ட நிபுணர் வழக்குரைஞர் எஸ்.நாரிமன் காலமானார்!

புதுதில்லி: நாட்டின் மூத்த வழக்குரைஞரும் பிரபல சட்ட நிபுணருமான ஃபாலி எஸ்.நாரிமன்(95) வயது மூப்பு மற்றும் உடல் பாதிப்பு காரணமாக புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் அவரது இல்லத்தில் காலமானார். இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1929 ஜனவரி 10 ஆம் தேதி மியான்மரில் பார்சி குடும்பத்தில் பிறந்த நாரிமன், 1950 இல் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தொழிலை தொடங்கினார். 1955-இல் பாப்சி காண்ட்ராக்டர் என்ற பெண்மணியை வாழ்க்கைத் துணையாக மணந்தார்.

இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை கொண்ட நாரிமன், இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவராக 19 ஆண்டுகள் இருந்துள்ளார்.

1972 மே முதல் 1975 ஜூன் வரை மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞராக பணியாற்றியுள்ளார். அரசுக்கு தனது சட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

சர்வதேச வர்த்தக தீர்ப்பாயத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

1976 இல் அரசியல் சட்ட 42 ஆம் திருத்தம் கொண்டு வந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரித்தார்.

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு சார்பில் ஆஜராகி பல ஆண்டுகள் வாதாடியுள்ளார். ஆனாலும் தமிழக அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின் போது ஜெயலலிதா சார்பில் ஆஜராகி வதாடி அவருக்கு ஜாமீன் பெற்றுத் தந்தார்.

சபரிமலை கோயிலுக்கு பெண்களை அனுமதிக்கும் வழக்கிலும் ஆஜராகி தனது வாதங்களை வைத்தது முக்கியத்துவம் வாய்ந்தது.

பிரபல சட்ட நிபுணர் வழக்குரைஞர் எஸ்.நாரிமன் காலமானார்!
விமான நிறுவன ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: சென்னை பயணிகள் தவிப்பு!

1999-2005 வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

நீதி, அரசியல் துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வந்த நாரிமனுக்கு இந்திய அரசு 1991-இல் பத்மபூஷன் மற்றும் 2007-இல் பத்மவிபூஷன் விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் தீர்ப்பு நாரிமனின் பல முக்கிய வழக்குகளில் ஒன்றாகும்.

நாரிமன் மகன் ரோகிண்டன் ஃபாலி நாரிமன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்.

இரங்கல்

மூத்த வழக்குரைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல், தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்தியாவின் மகத்தான மகன் காலமானார். நம் நாட்டின் தலைசிறந்த வழக்குரைஞர்களில் ஒருவர் மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக கோலோச்சிய சிறந்த மனிதர்களில் ஒருவர். அவர் இல்லாமல் நீதிமன்றத்தின் நடைபாதைகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்." என்று தெரிவித்துள்ளார்.

மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி, "ஒரு சகாப்தத்தின் முடிவு" என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, "சட்டப் பொறுப்பாளர், திறமையான நாடாளுமன்றவாதி மற்றும் உண்மையான மனிதனின் உருவகமான நாரிமன் மறைவு, இந்த தேசமும், சட்டத் துறையும் உயர்ந்த ஆளுமையை இழந்துவிட்டது. நான் எப்பொழுதும் பொக்கிஷமாகப் போற்றும் சில விசேஷமான தருணங்களை அவருடன் பகிர்ந்து கொண்டுள்ளேேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி." என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com