விவோ இந்தியா நிர்வாகிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு!
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட, விவோ இந்தியா நிறுவனத்தின் மூன்று நிர்வாகிகளை விடுவிப்பதற்கான உத்தரவை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் எதிர்தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பினார். நிர்வாகிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டதால், இந்த நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறினார்.
மேலும், அவர்கள் விடுவிக்கப்படாத ஒரு சூழ்நிலை இருந்திருந்தால் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருப்பேன் என்று தெரிவித்த நீதிபதி இதன் மீதான விசாரணையை நாளை (ஜன.3) ஒத்திவைத்தார்.
முன்னதாக, விவோ இந்தியா நிறுவனம் மற்றும் சிலருக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக, லாவா இன்டா்நேஷனல் கைபேசி நிறுவன நிா்வாக இயக்குநா் ஹரி ஓம் ராய், குவாங்வென் என்ற சீனா், பட்டயக் கணக்காளா்கள் நிதின் கா்க், ராஜன் மாலிக் ஆகிய 4 பேரை அமலாக்கத் துறை கைது செய்தது.
அவா்கள் மீது தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து மேலும் 3 பேரை அமலாக்கத்துறை கைது செய்தது. அதையடுத்து டிச.30-ம் தேதி அந்த மூன்று பேரை விடுவிக்குமாறு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.