தில்லி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த தகவலை தொடர்ந்து விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத்துறை இயக்குநர் அதுல் கார்க் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
“இன்று காலை 5 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் இருக்கக்கூடிய இயக்குநர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 7 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை அணைத்தனர்.
அலுவலகத்தில் இருந்த கோப்புகள், மேஜைகள், குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகின. இந்த விபத்தில் யாருக்கும் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.