கோப்புப்படம்
கோப்புப்படம்

பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள்!

ஜம்மு காஷ்மீரின் பந்திபூர் மாவட்டத்தில் உள்ள வூலார் ஏரிக்கு வருகை தரும் பறவைகள் வேட்டையாடப் படுவதை கண்காணிப்பதற்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
Published on

ஜம்மு காஷ்மீரின் பந்திபூர் மாவட்டத்தில் உள்ள வூலார் ஏரிக்கு வருகை தரும் பறவைகள் வேட்டையாடப் படுவதை தடுப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

வூலார் ஏரி ஆசியாவின் இரண்டாவது பெரிய மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும். இது பாரமுல்லா மற்றும் பந்திபூர் ஆகிய காஷ்மீரின் இரண்டு மாவட்டங்களில் சுமார் 200 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ளது. 

காஷ்மீரின் 60 சதவீத மீன் உற்பத்தி இந்த ஏரியில் இருந்து பெறப்படுகிறது. மேலும் பல லட்சக்கணக்கான உள்ளூர் மற்றும் இடம்பெயரும் பறவைகளுக்கு இருப்பிடமாக வூலார் ஏரி திகழ்கிறது.

சமீப ஆண்டுகளாக இப்பகுதியில் பறவைகளை வேட்டையாடுவது அதிகரித்து வருகிறது. இது பெரும் எண்ணிக்கையிலான பறவைகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

உள்ளூர் நிர்வாகம் பறவைகளை வேட்டையாடுதலுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. சமீபகாலமாக இதுதொடர்பாக பலரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் பறவைகள் வேட்டையாடப்படுவது தொடர்கிறது. எனவே இதனைத் தடுப்பதற்காக 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏரியைச் சுற்றி முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

வூலார் ஏரி பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் குழு நிர்வாகி இர்ஃபான் ரசூல் கூறுகையில், “வூலார் ஏரி திறந்தவெளிப் பகுதி. எனவே இப்பகுதியைக் கண்காணிப்பதற்கு கேமராக்கள் சிறந்த வழியாகும். இதனை கைப்பேசி மூலம் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் வேட்டையாடுதலைக் கண்காணிப்பதோடு, ஆக்கிரமிப்புகளையும் கண்காணிக்க முடியும்.” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com