பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா, பெண்களை மையமாகக்கொண்ட வளர்ச்சியிலிருந்து பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு நகர்ந்துள்ளதென மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, ஹர்தீப் சிங் புரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தையொட்டி, இங்கு பெண்கள் தலைமைத்துவம் அல்லது வீ லீட் லாஞ்ச் திறந்து வைத்த பிறகு பேசிய ஸ்மிருதி இரானி, “டாவோஸின் பிரதான தெருவில் இந்த ஓய்வறையை பார்ப்பதும் இதில் மிகப்பெரிய அளவுக்கு இந்தியர்களின் இருப்பைக் காண்பது மிகுந்த திருப்தி அளிக்கிறது” என்றார்.
பில், மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் தொழில்துறை சங்கம் சி2 உடன் இணைந்து பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் இந்த ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது.
வீடு, சமையல் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மோடி அரசு உறுதி செய்துள்ளது என்றார் ஸ்மிருதி இரானி.
இதே நிகழ்வில், வீட்டுவசதி மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சா் ஹர்தீப் சிங் புரி, “இந்தியா பெண்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி மாதிரிக்கு நகர்ந்துள்ளது என ஸ்மிருதி கூறியதை முழுமையாக ஏற்கிறேன். நாங்கள் பெண்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியுடன் தொடங்கினோம். ஆனால், இப்போது நாங்கள் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு நகர்ந்துள்ளோம். மேலும் இந்த வளர்ச்சிமாதிரி ஜிடிபிக்கு மிகவும் சாதகமாக செயல்படுகிறது" என்று கூறினார்.