ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை விழா முடிந்ததும் குடும்பத்துடன் அயோத்திக்கு சென்று குழந்தை ராமரை தரிசனம் செய்ய உள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை தெரிவித்தார்.
தில்லி அரசின் புனித யாத்திரைத் திட்டத்தின் கீழ் துவாரகாதீசர் கோயிலுக்குச் செல்லும் மூத்த குடிமக்களை சந்தித்த கேஜரிவால், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"பாதுகாப்புக் காரணங்களுக்காக ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு ஒருவருக்கு மட்டுமே அனுமதிக் கடிதம் கிடைத்தது. தனிப்பட்ட முறையில் அழைப்பிதழ் கொடுக்க ஒரு குழு வரும் என்று சொன்னார்கள். ஆனால் யாரும் வரவில்லை.
நான் என் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குழந்தை ராமரை தரிசனம் செய்ய விரும்புகிறேன். எனது பெற்றோரும் குழந்தை ராமரை தரிசிக்க ஏங்குகிறார்கள்.
ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் விழாவுக்குப் பிறகு நான் எனது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் குழந்தை ராமரை தரிசனம் செய்ய அயோத்திக்கு செல்வேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: நாட்டின் பொருளாதார வளர்ச்சி...: ஆர்பிஐ கவர்னர்
ராமர் கோயில் அறக்கட்டளை சார்பில் தில்லி முதல்வருக்கு தபால் மூலம் முறையான அழைப்பிதழை அனுப்பியுள்ளோம் என்று விஹெச்பி செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் முன்னதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.