கொல்கத்தா: துப்பறியும் துறையின் வங்கி மோசடிப் பிரிவினர் நடத்திய விசாரணையில், 6 குடியிருப்புகளை 125 முறை பத்திரப்பதிவு செய்து, வீட்டுக் கடன் மோசடி செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வழக்கில், ஒரு தனியார் வங்கியில் வீட்டுக்கடன் பெற்று ரூ.1.2 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும், இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
குடியிருப்பின் உரிமையாளர், அந்த வீட்டை விற்பவர் போலவும், சிலர், அந்த வீட்டை வாங்குவது போலவும் நடித்து, போலியான ஆவணங்களைக் காட்டி மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று இதர 6 தனியார் வங்கிகளில் நடந்த மோசடிகளின் மூலம் சுமார் ரூ.10 கோடி வரை முறைகேடு நடந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் 11 வீடுகளைக் கட்டிய உரிமையாளர் அதனை பல்வேறு தனியார் வங்கிகளில் விற்பனை செய்வது போல மோசடி செய்துள்ளதும், 6 குடியிருப்புகள் 125 முறை பத்திரப்பதிவு செய்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி 2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு இறுதிவரை நடந்துள்ளது. இதில் தொடர்புடைய 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலியான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு வங்கிக் கடன் கொடுத்திருப்பதாக, சில தனியார் வங்கி ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.