உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் மூலவர் பிரதிஷ்டை விழா ஜன. 22-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. அந்த வகையில் ஜன.22 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அன்றைய நாள் நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பங்குச்சந்தை மற்றும் தொழிற்சாலை அமைப்புகளுக்கு பிற்பகல் 2.30 மணிவரை அரைநாள் விடுமுறை அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு ஜனவரி 22 ஆம் தேதி தில்லி எய்ம்ஸ் மருத்துமனையும் காலையிலிருந்து மதியம் 2.30 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எய்ம்ஸின் அனைத்து துறையினருக்கும் அனுப்பபட்ட சுற்றறிக்கையில், எய்ம்ஸ் அரைநாள் இயங்காது என்றதுடன் முக்கியமான மருத்துவ சேவைகள் மட்டும் செயல்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.