துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான பிரீத்தி ரஜக் இந்திய ராணுவத்தின் முதல் பெண் சுபேதார் என்ற பெருமையைப் பெற்றார்.
விளையாட்டு வீராங்கனையான பிரீத்தி ரஜக் கடந்த 2022 டிசம்பர் மாதம் இந்திய ராணுவத்தில் இணைந்தார். அவர் சிறந்த முறையில் பணியாற்றியதைத் தொடர்ந்து அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “ஹவில்தார் பிரீத்தி ரஜக் இன்று சுபேதாராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
சுபேதார் பதவியை முதன்முறையாக பெண் ஒருவர் வகிப்பது இந்திய ராணுவத்திற்கு பெருமையான தருணமாகும்.
பிரீத்தி ரஜக்கின் சாதனை இளைய தலைமுறை பெண்கள் இந்திய ராணுவத்தில் இணைவதற்கு ஊக்கமளிக்கும்.” என்று தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் சமீபத்தில் நடந்து முடிந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் பிரீத்தி ரஜக்கும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.