ஹரியாணாவில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியே போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஜிந்த் பகுதியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சிக் கூட்டத்தில் பேசிய அரவிந்த் கேஜரிவால் ஹரியாணாவில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியே போட்டியிடும், ஆனால் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.
அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது, “இன்று மக்கள் ஆம் ஆத்மி என்ற ஒரு கட்சியின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளனர். ஒருபக்கம் பஞ்சாப் அரசாங்கத்தையும், இன்னொரு பக்கம் தில்லி அரசாங்கத்தையும் அவர்கள் பார்க்கின்றனர்.
ஹரியாணா மிகப்பெரிய மாற்றத்திற்கு காத்திருக்கிறது. தில்லி மற்றும் பஞ்சாப் மக்கள் முன்பு இவ்வாறு மாற்றம் வேண்டி மிகப்பெரிய முடிவு எடுத்து, ஆம் ஆத்மி கட்சியை ஆட்சியில் அமர்த்தினார்கள். இன்று அம்மாநில மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
ஹரியாணா மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும். ஆனால் மக்களவைத் தேர்தலை இந்தியா கூட்டணியுடன் இணைந்து எதிர்கொள்ளும்.” என்று தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுஷில் குப்தா ஏற்கனவே இதே கருத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.