உத்தரப் பிரதேசத்தில் புதிய சாலைகள் மற்றும் சாலைகளை சீரமைக்கும் பணிகளில் பிளாஸ்டிக்குகள் பயன்பாட்டை முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிமுகப்படுத்தினார். அதன்படி ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கள், சாலை உருவாக்கத்தில் மறு உபயோகம் செய்யப்படுகின்றன.
சாலைகள் உருவாக்கத்தில் பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்துவது, செலவைக் குறைப்பதோடு, நீண்ட நாள்கள் உழைக்கும் சாலைகள் உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமன்றி சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்குகளை மறு உபயோகம் செய்ய சிறந்த வழியாக இது கருதப்படுகிறது.
இதனால் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையை மக்களிடையே அரசு ஊக்குவிக்கப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தின் இந்த முயற்சி உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
பொதுப்பணித்துறை அளித்துள்ள தகவலினடிப்படையில் உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 813 கிலோ மீட்டர் தொலைவிலான சாலைகள் இந்த முறையில் கட்டப்பட்டும், புதுப்பிக்கப்பட்டுமுள்ளன.
வோர்ல்ட் பேன்க் வலைப்பதிவின் தரவுகளின்படி பிளாஸ்டிக் மூலம் சாலைகள் உருவாக்கும் நாடுகளில் இந்தியா முதன்மை வகிக்கிறது. 2500 கிலோமீட்டர்களுக்கும் அதிகமான அளவில் பிளாஸ்டிக் சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் சாலைகளை அமெரிக்கா உள்பட 15 நாடுகள் உருவாக்கிவருகின்றன.
சாலைகளை விரிவு மற்றும் பலப்படுத்தும் பணிகளை உத்தரப் பிரதேசம் திறம்பட செய்துவருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 9 கிலோ மீட்டர் சாலைகள் சீரமைக்கப்படுகின்றன, 11 கிலோமீட்டருக்கு புதிய சாலைகள் உருவாக்கப்படுகிறது.