நிதீஷ் குமாருக்கு 'பச்சோந்தி ரத்னா' விருது வழங்க வேண்டும்: தேஜ் பிரதாப் விமர்சனம்
குறுகிய காலத்தில் அடிக்கடி தனது அரசியல் கூட்டணியை மாற்றிக் கொள்ளும் நிதீஷ் குமாருக்கு 'பச்சோந்தி ரத்னா' விருது வழங்க வேண்டும் என்று தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்துவந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார், திடீரென அதில் இருந்து விலகி, மீண்டும் பாஜக உடன் கைகோர்த்துள்ளார். பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரியுள்ளார்.
இதனைக் குறிப்பிட்டு பேசியுள்ள லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், “பச்சோந்திகள் தனது நிறத்தை அடிக்கடி மாற்றிக் கொள்வதற்கு புகழ்பெற்றவை.
அதனைப் போலவே ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் குறுகிய காலத்திற்குள் அடிக்கடி தனது அரசியல் கூட்டணியை மாற்றிக் கொள்கிறார்.
இப்படி விரைவாக நிறம் மாறக்கூடிய நிதீஷ் குமாரின் திறமையைப் பாராட்டி அவருக்கு 'பச்சோந்தி ரத்னா' விருது வழங்கப்பட வேண்டும்.” என்று கூறினார்.
இதையும் படிக்க | பிகாரில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்!
2014 வரை பாஜக கூட்டணியில் இருந்த நிதீஷ் குமார், 2015 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியில் இணைந்து முதலமைச்சரானார். அந்தப் பதவிக்காலம் முடியும் முன்பே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜக ஆதரவுடன் முதல்வர் பதவியை தொடர்ந்தார்.
அதேபோல, 2020ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக உடன் சேர்ந்து வென்ற நிதீஷ் குமார், தேர்தலுக்குப் பின்பு அக்கூட்டணியில் இருந்து விலகி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். தற்போது மீண்டும் பாஜக ஆதரவுடன் முதல்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.