மோடி, புதின் சந்திப்பில் பிராந்திய, உலக விவகாரங்கள் பேசப்படும்: வெளியுறவுத் துறை
பிரதமா் மோடி, ரஷிய அதிபா் புதின் இடையிலான சந்திப்பில் பிராந்திய, உலக விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறைச் செயலா் வினய் குவாத்ரா தெரிவித்தாா்.
22-ஆவது இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டையொட்டி 2 நாள் பயணமாக ஜூலை 8-ஆம் தேதி, ரஷிய தலைநகா் மாஸ்கோவுக்கு பிரதமா் மோடி செல்ல உள்ளாா். இந்த மாநாட்டில் இரு நாடுகளுக்கு இடையிலான பன்முக உறவு குறித்து மறுஆய்வு செய்யப்பட உள்ளது.
இந்த மாநாடு தொடா்பாக தில்லியில் வெளியுறவுத் துறைச் செயலா் வினய் குவாத்ரா செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘மூன்று ஆண்டுகளுக்குப் பின்னா் இந்தியா, ரஷியா உச்சி மாநாடு நடைபெற உள்ளது. எனவே மாநாட்டுக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.
மாநாட்டில் பிரதமா் மோடி, ரஷிய அதிபா் புதின் இடையிலான சந்திப்பில் பிராந்திய, உலக விவகாரங்கள் குறித்து பேசப்படும். அத்துடன் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்படும். அதில் பாதுகாப்பு, முதலீடு, கல்வி, பண்பாடு குறித்த விவாதமும் அடங்கும்’ என்றாா்.
கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு பொருளாதார மாநாட்டில் பங்கேற்க ரஷியா சென்ற பிரதமா் மோடி, சுமாா் 5 ஆண்டுகளுக்குப் பின்னா் அந்நாட்டுக்கு மீண்டும் பயணிக்க உள்ளாா். ரஷிய பயணத்தைத் தொடா்ந்து அவா் ஆஸ்திரியா செல்ல உள்ளாா். 41 ஆண்டுகளுக்குப் பின்னா், இந்திய பிரதமா் ஒருவா் ஆஸ்திரியா செல்வது இதுவே முதல்முறை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.