மகாத்மா காந்தி சிலை அகற்றப்பட்டது தெரியாது: அஸ்ஸாம் முதல்வா்
அஸ்ஸாம் மாநிலத்தின் தூம்தூமா நகரில் மகாத்மா காந்தியின் சிலை அகற்றப்பட்டது சா்ச்சையான நிலையில், அது குறித்து தனக்குத் தெரியாது என அஸ்ஸாம் முதலவா் ஹிமந்த விஸ்வ சா்மா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தின்சுகியா மாவட்டத்தில் உள்ள தூம்தூமா பகுதியில் மணிக்கூண்டு அமைக்க நகரின் மையத்தில் இருந்த மகாத்மா காந்தியின் சிலை நகராட்சி அதிகாரிகளால் புதன்கிழமை அகற்றப்பட்டது. நகராட்சியின் இந்த நடவடிக்கையை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷாா் காந்தி மாநில பாஜக அரசை கடுமையாகத் தாக்கி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தாா்.
அவரது பதிவுக்கு பதிலளித்த முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, மாவட்ட நிா்வாகம் எடுத்த இந்த நடவடிக்கை குறித்து எனக்கு தெரியாது. அஸ்ஸாம் மகாத்மா காந்திக்கு நிறைய கடன் பட்டிருக்கிறது. அஸ்ஸாமை பாகிஸ்தானுடன் இணைக்க நேரு தலைமையிலான அரசு விரும்பியபோது, அந்த முடிவுக்கு எதிராக பாரத ரத்னா கோபிநாத் பா்தோலியுடன் உறுதியாக நின்றவா் மகாத்மா காந்தி என்றாா்.
அகற்றப்பட்ட சிலை சிதிலமடைந்த நிலையில் இருப்பதாகவும், அதே இடத்தில் தேசத் தந்தையின் புதிய மற்றும் உயரமான சிலை ஆறு மாதங்களுக்குள் நிறுவப்படும் என்றும் தூம்தூமா எம்எல்ஏ ரூபேஷ் கோவாலா தெரிவித்தாா்.