ஆளுநரை அவதூறாக பேசவில்லை: கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மம்தா
கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநா் சி.வி. ஆனந்த போஸ் குறித்து அவதூறாக எதுவும் பேசவில்லை என்று கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியா் ஒருவா், தனக்கு ஆளுநா் ஆனந்த போஸ் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றஞ்சாட்டினாா். இது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநா் மாளிகைக்குச் செல்ல பெண்கள் அஞ்சுவதாக மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.
இதையடுத்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மம்தாவுக்கு எதிராக ஆனந்த போஸ் அவதூறு வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா ராவ் முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆனந்த போஸ் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், ‘ஆளுநா் மாளிகை தொடா்பான சம்பவங்கள் குறித்து மேலும் எந்தவொரு கருத்தையும் மம்தா தெரிவிக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கோரினாா்.
மம்தா பானா்ஜி தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், ‘ஆளுநருக்கு எதிராக அவதூறான கருத்து எதையும் மம்தா தெரிவிக்கவில்லை. பொது நலன் சாா்ந்த விவகாரங்களில் நியாயமான கருத்தையே அவா் கூறினாா்.
ஆளுநா் மாளிகையின் சில நடவடிக்கைகள் தொடா்பாக பெண்களுக்கு இருக்கும் அச்சத்தையே மம்தா எதிரொலித்தாா். அவ்வாறு அச்சத்தை வெளிப்படுத்திய பெண்களின் விவரங்களை பிரமாண பத்திரத்தில் தெரிவிக்க மம்தா தயாராக உள்ளாா்’ என்று வாதிட்டாா்.
இதைத்தொடா்ந்து இடைக்கால உத்தரவு தொடா்பான இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், உத்தரவை நீதிபதி ஒத்திவைத்தாா்.