
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு வருகின்ற 12-ஆம் தேதி பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரேம் குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேசத்தில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் 135 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. கூட்டணிக் கட்சிகளான ஜனசேனை 21, பாஜக 11 தொகுதிகளில் வென்றுள்ளது.
ஆந்திரத்தை ஆட்சி செய்து வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது.
மேலும், மக்களவைத் தொகுதிகளிலும் 16 இடங்களை கைப்பற்றியுள்ள சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைய முக்கிய கூட்டணிக் கட்சியாக உருவெடுத்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் புதன்கிழமை பங்கேற்ற சந்திரபாபு நாயுடு, மீண்டும் வெள்ளிக்கிழமை அமைச்சரவை பங்கீடு குறித்து பேசவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முழு ஆதரவை அளிப்பதாக பிரதமரை சந்தித்து சந்திரபாபு நாயுடு நேற்றே தெரிவித்துவிட்டதகாவும், காங்கிரஸ் என்ன கூறினாலும் கவலையில்லை, எங்களின் முழு ஆதரவு மோடிக்குதான் என்று பிரேம் குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜூன் 12ஆம் தேதி சந்திரபாபு நாயுடு பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.