
புது தில்லி: நாங்கள் தோற்கவும் இல்லை, தோற்கவும் மாட்டோம், நாங்கள் தோற்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கூட்டணி கட்சித் தலைவர்கள், பாஜக மூத்த தலைவர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், நாடாளுமன்றக் குழு தலைவராக, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை ராஜ்நாத் முன்மொழிய, அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோர் அதனை வழிமொழிய, ஒருமித்த குரலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, நாங்கள் தோற்கவில்லை, தோற்கவும் மாட்டோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்குக் கிடைத்திருப்பது சாதாரண வெற்றியல்ல. நாங்கள் தோற்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
கடந்த 4ஆம் தேதிக்கு முன்பே, ஒரு சிறுவனிடம், யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று கேட்டால்கூட, அவர் தேசிய ஜனநாயக கூட்டணிதான் என்று சொல்வார். இந்த தேர்தலில் வென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 2014 2019 மற்றும் 2024 தேர்தல்களிலும் காங்கிரஸ் பெற்ற வெற்றியை விட தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வென்றுள்ளது, குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாத எதிர்க்கட்சிகள் ஏன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியவில்லை என்றார் பிரதமர் மோடி.
முன்னதாக பேசிய மோடி, நாடே முதன்மையானது. நாட்டின் வளர்ச்சியில் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டேன், வாஜ்பாய், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், பால் தாக்கரே போன்றவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வித்திட்டனர். தேர்தலுக்கு முன்பே, உருவான கூட்டணி, தேர்தலில் வெற்றிபெற்று, இப்படி ஒரு கூட்டணி ஆட்சியை அமைப்பது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. கடந்த 30 ஆண்டுகளில், தற்போது உருவான தேசிய ஜனநாயக கூட்டணியே வலிமையானது. அனைத்து விவகாரங்களிலும் ஒருமித்த முடிவை எட்டுவதே எங்கள் கூட்டணியின் நோக்கம். அனைவருக்குமான ஆட்சியை நடத்துவது என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதி பூண்டுள்ளது. அரசை நடத்துவதற்கு ஒருமித்த கருத்துதான் முக்கியம், பெரும்பான்மை அல்ல.
அரசு எப்படி நடக்கிறது? எதனால் நடக்கிறது? என்பதெல்லாம் மக்களுக்கு இப்போதுதான் தெரிகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.