பாஜகவின் அரசியல் ஆயுதமா அமலாக்கத்துறை? ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!
மத்தியில் ஆளும் பாஜக அரசு அமலாக்கத்துறையை தனது அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து பேசிய தில்லி அமைச்சர் அடிஷி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை தேர்தல் பிரசாரத்தில் இருந்து தடுக்கும் வகையில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தெலங்கானா முன்னாள் முதல்வர் மகள் கே கவிதாவை கடந்த வாரம் அமலாக்கத்துறை கைது செய்தது.
தில்லி கலால் கொள்கை அமல்படுத்தலில் மதுபான உரிமம் பெற ரூ.100 கோடி பணம் வழங்கியதில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட கவிதா அந்த வழக்கில் விசாரணைக்காக மார்ச் 23 வரை தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை மறுத்த அடிஷி, “அமலாக்கத்துறை மத்திய அரசின் புலனாய்வு அமைப்பாக செயல்படுவதற்கு பதிலாக அரசியல் கட்சியாக செயல்படுகிறது. அழுத்தத்தோடு ஏன் அமலாக்கத்துறை செயல்பட வேண்டும் என்பதே இப்போது எழும் கேள்வி. பாஜவின் அரசியல் ஆயுதமாக அமலாக்கத்துறை உள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், பாஜக பயப்படும் ஒரே எதிர்க்கட்சி தலைவர் அரவிந்த் கேஜரிவால்தான் என அடிஷி குறிப்பிட்டார்.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் 9-வது முறையாக அரவிந்த கேஜரிவாலுக்கு மார்ச் 21 ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முந்தைய 8 சம்மன்களை அவர் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.