டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜக்கி வாசுதேவ் வியாழக்கிழமை (மார்ச் 27) மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
சில வாரங்களாக கடும் தலைவலிக்கு உள்ளான ஜக்கிக்கு மார்ச் 17-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆபத்தான அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு ஜக்கி வாசுதேவுக்கு மருத்துவர்கள் எதிர்பார்த்ததை விட உடல்நலனில் நல்ல முன்னேற்றம் இருந்தது. கிட்டத்தட்ட 10 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து தற்போது வீடு திரும்பியுள்ளார்.
முன்னதாக, அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதா ரெட்டி அவர்கள் ஜக்கியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் “ஜக்கி வாசுதேவ் அவர்கள் உடல் நலம் தேறி வருவது குறித்து மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவர் குணமடையும் அதே வேளையில் அவருடைய உற்சாகத்தை அப்படியே தக்கவைத்து கொண்டுள்ளார். அவருடைய உடல்நலம் குறித்து விசாரிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு அவர் உடல்நலன் பெற்று வீடு திரும்புவது நற்செய்தியாக இருக்கும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.