மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், தேசியவாத கங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத் பவார் பிரதமர் நரேந்திர மோடியை, “அவர் பேசுவது உண்மைக்கும் யதார்த்தத்திற்கும் புறம்பானதாகவே இருக்கும்” என்று விமர்சித்துள்ளார்.
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, இந்தியா கூட்டணி சார்பில் மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில்,10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சரத் பவார், “பிரதமர் மோடி எப்போதும் மக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்துப் பேசாமல் அவர்களின் கவனத்தை திசை திருப்புகிறார். உண்மைக்குப் புறம்பாக மட்டுமே பேசும் ஒரு பிரதமரை நான் இதுவரை கண்டதில்லை. அவர் என்னையும் உத்தவ் தாக்கரேவையும் தாக்கிப் பேசுவதிலேயே குறியாகவுள்ளார்.
இவர்கள் ஏன் மகாராஷ்டிராவிற்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்துகிறார்கள் என்றால், அப்போதுதான் மோடி அதிக முறை இங்கு வந்து வாக்கு கேட்க முடியும்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டுவருவார்கள் என்று மோடி அடிக்கடி பேசி வருவது சமூகப் பதற்றத்தை உருவாக்கத்தான். எங்கள் கூட்டணி அவ்வாறு கூறவில்லை. மேலும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லாத வாரிசுரிமை வரி மற்றும் சொத்து மறுபங்கீடு குறித்தும் பொய்களைப் பரப்பி வருகிறார்” எனக் கூறினார்.
பிரதமர் மோடி மகாராஷ்டிரா தேர்தல் பரப்புரையின்போது சரத் பவாரை தாக்கிப் பேசுகையில் “மகாராஷ்டிராவில் ஒரு அலைந்து திரியும் ஆத்மா ஒன்று உள்ளது. அது, தான் வெற்றிபெறவில்லையெனில் மற்றவர்களின் நற்காரியங்களைக் கெடுத்துவிடும்” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.