சர்ச்சைக்குரிய வகையில் விடியோ பதிவிட்டதாக பாஜக தேசிய செயலாளர் ஜெ.பி. நட்டாவுக்கு கர்நாடக காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கர்நாடக மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் விடியோ பதிவிட்டது தொடர்பாக, பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியாவுக்கும் கர்நாடக காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெ.பி. நட்டா மற்றும் அமித் மாளவியா ஆகிய இருவரும் அடுத்த 7 நாள்களுக்குள் ஆஜராக வேண்டும் எனவும் சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் நலனுக்காக மட்டுமே காங்கிரஸ் கட்சி செயல்படுவதாக, இந்துக்கள் மத்தியில் பகையுணர்வை ஏற்படுத்தும் வகையில் கர்நாடக பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில், பதிவிடப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பதிவின் நோக்கம் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு எதிரானதாக உள்ளதாகவும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகார்ம தொடர்பாக அடுத்த 7 நாள்களுக்குள் அல்லது 7வது நாள் காலை 11 மணியளவில் ஜெ.பி. நட்டா மற்றும் அமித் மாளவியா ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.