கடும் வெப்பநிலைக்கும் தண்ணீர் பஞ்சத்துக்கும் விடிவு பிறக்கும் வகையில் பெங்களூருவில் 48 மணி நேரமாக கனமழை பெய்துவருகிறது.
கடந்த சில மாதங்களாகவே பெங்களூரு.. குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள் கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்தித்தன. மாநில அரசு, நீர் பகிர்மானத்தில் கடும் விதிமுறைகளைப் பின்பற்றியது.
நகரின் பாதிக்கு மேலான இடங்களில் ஆழ்துளைக்கிணறுகள் வறண்டன. 41 ஆண்டுகளாக இல்லாதளவில் வறட்சியை பெங்களூரு சந்தித்தது.
வியாழக்கிழமை இரவு பெய்த மழையில், மின்னல் மற்றும் இடி காரணமாக 70 மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும் 171 இடங்களில் மரங்களின் கிளைகள் உடைந்து விழுந்ததாகவும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மின்கம்பத்தின் மீது மரம் விழுந்த சம்பவத்தில், வடக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பம் சிறு இழையில் உயிர் தப்பியது.
இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.