
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமீனில் வெளிவந்துள்ள அரவிந்த் கேஜரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரி காந்த் பதி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா அமர்வு, இதில் எப்படி நாங்கள் தலையிட முடியும் என்று மனுதாரருக்கு கேள்வி எழுப்பினர்.
மேலும், இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் விரும்பினால் நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும், நாங்கள் தலையிட விருப்பமில்லை எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.
முன்னதாக, அரவிந்த் கேஜரிவாலை பதவிநீக்கம் செய்யக் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், விளம்பரத்துக்காக நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரருக்கு ரூ. 50,000 அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் தில்லி கலால் கொள்கை வழக்கை விசாரித்துவரும் அமலாக்கத் துறை, தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலை கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. பின்னா், திகாா் சிறையில் அடைக்கப்பட்ட கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. தில்லி நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவின்படி, அவருக்கு மே 20-ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, வருகின்ற 25-ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு நிபந்தனைகளுடன் 21 நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.