
புணேவில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தந்தை மற்றும் தாத்தாவுக்கு மே 31 வரை போலீஸ் காவல் விதித்து மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
புணேவில், மே 19ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவில், மதுபோதையில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கிய சிறுவன் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் குற்றவாளி சிறுவன் என்பதால், சட்டப்பிரிவு 75 மற்றும் 77ன்படி, குழந்தைகளை கவனக்குறைவாக விடுதல் மற்றும் குழந்தைகளுக்கு போதை அல்லது மதுப் பழக்கம் ஏற்பட அனுமதிப்பது போன்ற பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவனின் தந்தை விஷால் அகர்வால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, வீட்டின் கார் ஓட்டுநரை சரணடையக் கூறி மிரட்டி கட்டாயப்படுத்தி வழக்கை திசை திருப்ப முயன்ற குற்றச்சாட்டின் கீழ் சிறுவனின் தாத்தா சுரேந்திர குமாரும் கைது செய்யப்பட்டார்.
முதலில் சிறுவனுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டிருந்த நிலையில், குற்றத்தின் அடிப்படையில் பிணை ரத்து செய்யப்பட்டு சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்துவதற்காக சிறுவனின் தந்தை மற்றும் தாத்தாவை போலீஸ் காவலில் எடுக்க புணே நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மே 31-ஆம் தேதி வரை இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் சிறுவனுக்கு மது வழங்கிய பார் உரிமையாளர்கள், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய குற்றத்துக்காக இரு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், கடமை தவறியதற்காக இரண்டு காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.