புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

நாட்டின் மிகப்பெரிய கொடைவள்ளல் யார்? அம்பானியோ அதானியோ அல்ல!

நாட்டின் மிகப்பெரிய கொடைவள்ளல் யார்? என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அம்பானியோ அதானியோ இல்லை.

News image

அம்பானி - அதானி

Updated On :8 நவம்பர் 2024, 7:57 am

நாட்டின் மிகப்பெரிய கொடை வள்ளல்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதில், முதல் இடத்தில் இருப்பது கோடீஸ்வரர்களின் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் முகேஷ் அம்பானியோ, கௌதம் அதானியோ அல்ல என்கின்றன தரவுகள்.

ஹூருன் இந்தியா நன்கொடையாளர்களின் பட்டியல் 2024 வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், நாட்டின் மிகப்பெரிய கொடைவள்ளல்கள் யார் என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் மட்டுமல்லாமல், ஆசிய நாடுகளில் மிகப்பெரிய பணக்காரர்கள் மற்றும் கோடீஸ்வரர்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கும் முகேஷ் அம்பானியோ அல்லது கௌதம் அதானியோ ஹூருன் இந்தியா நன்கொடையாளர்களின் பட்டியலில் முதலிடத்தில் இல்லை.

மாறாக, எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனர் சிவ நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர், இந்த ஆண்டு பல்வேறு திட்டங்களுக்காக ரூ.2,153 கோடி நன்கொடையாக அளித்து முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார்களே தவிர, அவர்கள் கொடுத்திருக்கும் நன்கொடை என்னவோ மூன்று இலக்கத்தில்தான். அதாவது அம்பானி ரூ.407 கோடி நன்கொடை கொடுத்துள்ளார். (இரண்டாயிரம் கோடி எங்கிருக்கிறது, 400 கோடி ரூபாய் என்பது எங்கே இருக்கிறது என்றெல்லாம் விமர்சிக்கக் கூடாது. )

அடுத்த இடத்தில் பலரும் நினைப்பது போல நம்ம கௌதம் அதானி இல்லை. பஜாஜ் குடும்பம் ரூ.352 கோடி நன்கொடையுடன் 3ம் இடத்தைப் பிடித்துள்ளது.

நாட்டில் முதல் பத்து இடங்களில் பிடித்திருக்கும் நன்கொடையாளர்களின் ஒட்டுமொத்த நன்கொடை தொகை என்பது ரூ.4,625 கோடியாகும்.

இவர்களது பெரும்பாலான நன்கொடைகள் கல்வி, பொது சுகாதாரம் மற்றும் கட்டடங்களில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் அமைப்புகளுக்காகவே அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பஜாஜ் குடும்பத்தினர் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிக நன்கொடை அளித்து மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

நாட்டில் மிகப்பெரிய தொழிலதிபராக வளர்ந்து வருபவரும், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் என்று எதிர்க்கட்சிகளால் அழைக்கப்படுபவருமான கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர், ரூ.330 கோடி நன்கொடை அளித்து இந்த ஆண்டு ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்களது நிறுவனம் சார்பில், அதானி அறக்கட்டளை நடத்தி அதன் மூலம் பல நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறதாம்.

இவர்களில் ரோஹிணி நிலகேனி ரூ.154 கோடி நன்கொடையுடன் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.