

மிர்சாபூர் (உ.பி): உத்தரப்பிரதேசம் மாநிலம், மிர்சாபூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை லாரி மீது டிராக்டர் டிராலி மோதியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 3 பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து மிர்சாபூர் காவல் கண்காணிப்பாளர் அபிநந்தன் கூறியதாவது:
படோஹி மாவட்டத்தில் கட்டுமானப் பணிக்கு சென்ற தொழிலாளர்கள் 13 பேர் பணி முடிந்து டிராக்டர் டிராலியில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, மிர்சாபூர்-வாரணாசி எல்லையில் உள்ள கச்சவான் மற்றும் மிர்சாமுராத் இடையே ஜிடி சாலையில் வந்து கொண்டிருந்த போது வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் டிராலி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், டிராக்டர் டிராலியில் இருந்த 10 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர், 3 பேர் காயமடைந்தனர்.
இதையும் படிக்க | ம.பி.யில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து!
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டனர்.
இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உடல்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் . காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக கச்சவான் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று அபிநந்தன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.