ரயிலை கவிழ்க்க சதி! தண்டவாளத்தில் சிலிண்டர், பெட்ரோல், தீப்பெட்டி...

கான்பூரில் ரயிலை கவிழ்க்க நடத்தப்பட்ட சதி பற்றி...
UP
தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரை கைப்பற்றிய போலீசார்.PTI
Published on
Updated on
1 min read

கான்பூரில் அதிவேகமாக வந்த ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் பாட்டில், தீப்பெட்டி உள்ளிட்டவை மர்ம நபர்கள் வைத்துள்ளனர்.

தண்டவாளத்தில் பொருள்கள் இருப்பதைக் கண்ட ஓட்டுநர், ரயிலை நிறுத்த முயற்சித்தும் சிலிண்டரில் ரயில் மோதியுள்ளது. நல்வாய்ப்பாக சிலிண்டர் வெடிக்காததால் பயணிகள் தப்பினர்.

ரயிலை கவிழ்க்க சதி

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்து ஹரியாணா மாநிலம் பிவானி நோக்கி காளிந்தி விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.

அப்போது, கான்பூருக்கு அருகே சிவராஜ்பூர் பகுதியில் தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் பாட்டில் உள்ளிட்ட பொருள்கள் கிடப்பதைக் கண்ட ஓட்டுநர், ரயிலை உடனடியாக நிறுத்த முயற்சித்துள்ளார்.

இருப்பினும், ரயிலின் என்ஜின் சிலிண்டரை மோதி தண்டவாளத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளது. ரயில் மோதியதும் சிலிண்டர் வெடிக்காததால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

UP
நிலவில் அதிர்வுகள்! சந்திரயான் 3 வெளியிட்ட புதிய தகவல்!

போலீசார் தீவிர விசாரணை

இந்த சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு 8.20 மணியளவில் தகவல் அளிக்கப்பட்டவுடன், கான்பூர் காவல்துறை மற்றும் தீவிரவாத ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை உத்தரப் பிரதேச காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், சிலிண்டர், பெட்ரோல் பாட்டில், தீப்பெட்டி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது.

தண்டவாளங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

உத்தரப் பிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு சார்பில் தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கியுள்ளதாகவும், முக்கிய தண்டவாள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் காவல்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, புதிய குற்றவியல் சட்டங்கள் கீழ் மர்ம நபர்கள் மீது ரயில்வே காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, மூத்த அதிகாரிகள் தலைமையில் 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த பகுதியில் 20 நிமிடங்களுக்கு மேலாக நிறுத்திவைக்கப்பட்ட ரயிலை மீண்டும் பில்ஹவுர் ரயில் நிலையத்தில் நிறுத்தி காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஒன்றரை மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com