6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரயிலை கவிழ்க்க சதி! தண்டவாளத்தில் சிலிண்டர், பெட்ரோல், தீப்பெட்டி...

கான்பூரில் ரயிலை கவிழ்க்க நடத்தப்பட்ட சதி பற்றி...

News image
தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரை கைப்பற்றிய போலீசார்.- PTI
Updated On :9 செப்டம்பர் 2024, 8:39 am

இணையதளச் செய்திப் பிரிவு

கான்பூரில் அதிவேகமாக வந்த ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் பாட்டில், தீப்பெட்டி உள்ளிட்டவை மர்ம நபர்கள் வைத்துள்ளனர்.

தண்டவாளத்தில் பொருள்கள் இருப்பதைக் கண்ட ஓட்டுநர், ரயிலை நிறுத்த முயற்சித்தும் சிலிண்டரில் ரயில் மோதியுள்ளது. நல்வாய்ப்பாக சிலிண்டர் வெடிக்காததால் பயணிகள் தப்பினர்.

ரயிலை கவிழ்க்க சதி

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்து ஹரியாணா மாநிலம் பிவானி நோக்கி காளிந்தி விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.

அப்போது, கான்பூருக்கு அருகே சிவராஜ்பூர் பகுதியில் தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் பாட்டில் உள்ளிட்ட பொருள்கள் கிடப்பதைக் கண்ட ஓட்டுநர், ரயிலை உடனடியாக நிறுத்த முயற்சித்துள்ளார்.

இருப்பினும், ரயிலின் என்ஜின் சிலிண்டரை மோதி தண்டவாளத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளது. ரயில் மோதியதும் சிலிண்டர் வெடிக்காததால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

போலீசார் தீவிர விசாரணை

இந்த சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு 8.20 மணியளவில் தகவல் அளிக்கப்பட்டவுடன், கான்பூர் காவல்துறை மற்றும் தீவிரவாத ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை உத்தரப் பிரதேச காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், சிலிண்டர், பெட்ரோல் பாட்டில், தீப்பெட்டி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது.

தண்டவாளங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

உத்தரப் பிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு சார்பில் தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கியுள்ளதாகவும், முக்கிய தண்டவாள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் காவல்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, புதிய குற்றவியல் சட்டங்கள் கீழ் மர்ம நபர்கள் மீது ரயில்வே காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, மூத்த அதிகாரிகள் தலைமையில் 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த பகுதியில் 20 நிமிடங்களுக்கு மேலாக நிறுத்திவைக்கப்பட்ட ரயிலை மீண்டும் பில்ஹவுர் ரயில் நிலையத்தில் நிறுத்தி காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஒன்றரை மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.