
ஜார்க்கண்டில் நாளை 6 வந்தே பாரத் ரயில்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர்!
ஜார்க்கண்ட் மாநிலத்திற்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு 6 வந்தே பாரத் ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
தேர்தல் நடைபெறவுள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் முக்கியத்துவமாக ஆறு வந்தே பாரத் ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார். மேலும் ரூ.21 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அக்கல் நாட்டுகிறார்.
6 வந்தே பாரத் ரயில்
வந்தே பாரத் ரயில்கள் பெர்ஹாம்பூர்-டாடா, ரூர்கேலா-ஹவுரா, தியோகர்-பனாரஸ், ஹவுரா-கயா மற்றும் ஹவுரா-பாகல்பூர் இடையே இயக்கப்படுகிறது.
அதன்பின்னர் ஜாம்ஷெட்பூரில் உள்ள கோபால் மைதானத்தில் பாஜக ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக மாற்ற பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பிரதமர் சாலை பேரணியும் நிகழ்த்த உள்ளார்.
இதுதொடர்பாக மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் கூறுகையில்,
பிரதமர் மோடி செப்.15ல் ஜார்க்கண்டிற்கு வருகிறார். பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தற்காலிக முகாம்களில் வசிக்கும் 1,13,400 பேருக்கு வீடுகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி ஜார்க்கண்டில் சுமார் 6 மணி நேரம் தங்குகிறார். அவர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தை காலை 8.45 மணிக்கு வந்தடைவார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஜாம்ஷெட்பூர் சென்று அங்கிருந்து டாடாநகர் ரயில் நிலையத்திற்குச் செல்கிறார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமரின் ஜார்க்கண்டின் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பிற்காக 3,000க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்டில் பிரதமரின் வருகையையொட்டி பாஜகவின் தேர்தல் பிரசாரம் மேலும் உற்சாகமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.