சிறைச்சாலைகளில் ஜாதியப் பாகுபாடு குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜாதியப் பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிறைக் கையேடு இருப்பதாக கூறி தொடரப்பட்டுள்ள பொதுநல மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் 11 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
11 மாநிலங்களில் உள்ள சிறைச்சாலைகளில் ஜாதியின் அடிப்படையில் கைதிகளுக்கு அறை ஒதுக்கப்படுவதாகவும், பணி வழங்குவதாகவும் கூறி மூத்த வழக்கறிஞர் முரளிதர் சமர்ப்பித்த சிறைக் கையேடுகளை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கவனத்தில் கொண்டது.
சில பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக முரளிதர் தெரிவித்தார்.
11 மாநிலங்களின் சிறைக் கையேடுகளையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு, நான்கு வாரங்களுக்குப் பிறகு இதனை விசாரிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தது.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சுகன்யா சாந்தா என்பவர் இந்த பொதுநல மனுவைத் தொடர்ந்துள்ளார்.
இதையும் படிக்க | அதானி முறைகேடு வழக்கை செபியே விசாரிக்கும்: உச்சநீதிமன்றம்
இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் 11 மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை கையாள்வதில் உதவுமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கூறியுள்ளது.
உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஒடிசா, ஜார்க்கண்ட், கேரளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய 11 மாநிலங்களின் சிறைச்சாலைகளில் ஜாதியப் பாகுபாடு காட்டப்படுவதாக மனுவில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.