அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கருவறைக்கு தங்கக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. கதவுகள் பொருத்தப்பட்டதன் புகைப்படங்கள் இன்று (ஜன.9) வெளியாகியுள்ளன. ராமர் கோயிலில், கருவறை உள்பட மொத்தம் 13 கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் மூலவர் பிரதிஷ்டை விழா ஜன. 22-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 136 சனாதனத்தைச் சேர்ந்த 25,000 ஹிந்து மதத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு சிறப்பு விருந்தினர்களாக 10,000 பேர் பங்கேற்கவுள்ளனர். இதுபோன்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் முழுவதும் முடிந்த நிலையில், இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கருவறையில் சிலை பிரதிஷ்டை செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில், கருவறையில் இருபுறம் திறக்கும் வகையில் தங்கக்கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.