
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்திருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் மீதான விலைகள் குறையும் என மக்கள் அதிக ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், கலால் வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், எண்ணெய் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நிலையில், கச்சா எண்ணெய் கொண்டு பெட்ரோல் உற்பத்தி செய்யும்போது மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், பெட்ரோல், டீசல் விலை குறையாது, கச்சா எண்ணெய் விலை குறைவினால் ஏற்படும் லாபம், ஒட்டுமொத்தமாக மத்திய அரசுக்கு வருவாயாக செல்லும் என்று கூறப்படுகிறது.
கலால் வரி என்பது, இந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் சில குறிப்பிட்ட பொருள்களுக்கு மட்டும் மத்திய அரசு கலால் வரி விதிக்கும். இது உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் மீது விதிக்கப்படும் மறைமுக வரி.
இந்த வரியை, உற்பத்தியாளர் செலுத்திவிட்டு, அதனை உற்பத்தி செய்த பொருளின் விலையுடன் சேர்த்து மக்களிடமிருந்து வசூலித்துக் கொள்வார்.
கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருக்கும்பட்சத்தில், இவ்வாறு கலால் வரி உயர்த்தப்பட்டிருந்தால், உடனடியாக அது பெட்ரோல், டீசல் விலையிலும் எதிரொலிக்கும். ஆனால், இப்போது கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதால், அது நேரடியாக மக்களுக்குச் சென்று சேராமல் தடுத்து அந்த லாபத்தை கலால் வரி என்ற பெயரில் மத்திய அரசு பங்கிட்டுக் கொள்கிறது.
அதேவேளையில், நிலைமை சீரடைந்து, கச்சா விலை உயரும்பட்சத்தில், ஒன்று மத்திய அரசு கலால் வரியை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இந்த கலால் வரியையும் சேர்த்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகள் மீது திணித்துவிடக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.