நாடு கடத்தப்பட்டார் தஹாவூா் ராணா! தில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

இந்தியாவுக்கு அழைத்துவரப்படும் தஹாவூா் ராணா பற்றி...
தஹாவூர் ராணா
தஹாவூர் ராணா
Published on
Updated on
1 min read

மும்பை தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை அழைத்துக் கொண்டு புறப்பட்ட இந்தியா அதிகாரிகள் இன்று தில்லி வந்தடையவுள்ளனர்.

அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலையே, லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் இருந்த தஹாவூர் ராணாவை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டதாக அந்நாட்டு சிறைத்துறை தெரிவித்துள்ளது.

தேசிய புலனாய்வு முகமையின் டிஐஜி ஜெயா ராவ் தலைமையிலான குழுவினர், தஹாவூா் ராணாவை அழைத்துக் கொண்டு தனி விமானம் மூலம் அமெரிக்கவிலிருந்து அந்நாட்டு நேரப்படி புதன்கிழமை காலை 6.30 மணியளவில் புறப்பட்டனர்.

அவர்களின் விமானம் இன்று பிற்பகல் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், எங்கு தரையிறங்கவுள்ளது என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில், தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ராணாவை நேரில் ஆஜர்படுத்தாமல், காணொலி வாயிலாக ஆஜர்படுத்தி காவலில் வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தொடர்ந்து, திகார் சிறையில் அடைக்கப்படும் ராணாவிடம் மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளன.

இந்த நிலையில், தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் புதன்கிழமை மாலை உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்ற கூட்டத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.

கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 170-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு அவா் உதவி வந்தது நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவரை குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்தது. தற்போது அந்நாட்டின் லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அவா் அடைக்கப்பட்டுள்ளாா்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் தான் இந்திய சிறையில் சித்திரவதை செய்யப்படலாம் என்று தெரிவித்து, நாடு கடத்துவதற்கு எதிராக ராணா தாக்கல் செய்த மனுவை கடந்த ஜன.21-ஆம் தேதி அமெரிக்க உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

கடந்த பிப்ரவரி மாதம் பிரதமா் மோடி அமெரிக்கா சென்றபோது, இந்தியாவிடம் தஹாவூா் ராணா ஒப்படைக்கப்படுவாா் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்தாா்.

இதைத்தொடா்ந்து நாடு கடத்தப்படுவதற்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் தஹாவூா் ராணா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை அந்த நீதிமன்றம் நிராகரித்துவிட்டதாக அமெரிக்க உச்சநீதிமன்ற வலைதளத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com